Friday, December 10, 2010

காலை டிபனுடன் குடிக்க ஏற்றது ஜூஸா, பாலா?

 
 காலை டிபனுடன் குடிக்க ஏற்றது ஜூஸா, பாலா? என்ற பட்டிமன்ற ஆராய்ச்சி ஆஸ்திரேலியாவில் நடந்தது. குண்டாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். மொத்த கூட்டமும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒரு குரூப்புக்கு தினமும் காலை டிபனுடன் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட சுமார் 50 கலோரி அளவுள்ள பால் கொடுக்கப்பட்டது. இன்னொரு குரூப்புக்கு அதே கலோரி அளவுக்கு ஜூஸ்.
ஜூஸ் குடித்தவர்கள் மதிய உணவை வரிந்து கட்டி சாப்பிட்டனர். பால் குடித்தவர்களால் அந்தளவு மல்லுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுமே ‘ஏவ்’ வந்துவிட்டது.
இந்த ஆய்வு பற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சத்தான பானம் பால். கொழுப்பு நீக்கிய பாலை குண்டாக இருப்பவர்கூட அருந்தலாம். குறைவான கலோரிகள் மட்டுமே உடலில் சேரும். பாலில் புரதம், லாக்டோஸ் அதிகம். எனவே, காலை டிபன் முடித்ததும் ஒரு டம்ளர் பால் குடித்தால் மதிய உணவின் அளவு குறையும். நாளாவட்டத்தில் உடல் தானாக இளைக்கும். பழச்சாறு எளிதில் செரிக்கும். செரிமானத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறிது நேரத்திலேயே பசிக்கும். சீக்கிரம் சாப்பிடுவோம். அதிகம் சாப்பிடுவோம். உடம்பு வெயிட் போடும். காலை டிபனுடன் அருந்துவதற்கு ஜூசை விட பால்தான் பெஸ்ட் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ‘லார்ஜ் பெக்’ என்பது 60 மி.லி. 3 பெக் என்பது ஏறக்குறைய ஒரு டம்ளர் என்பது குடிநிபுணர்களின் விளக்கம்.

Monday, September 20, 2010

காதலிலே நீ எந்த வகை?

 அழகான ஒரு பெண் நம்மை கடந்து போனால் நம் பார்வை தன்னாலே அவள் பின்னாலே போகும். அந்த அழகி கடந்து செல்லும் வரை வைத்த கண்கள் அகலாது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... நீங்க சொல்ல வந்த மேட்டருக்கு வாங்க என்கிறீர்களா...?
எது எதுக்கோ ஆராய்ச்சி செய்து பல ‘அரிய’ தகவல்களை அள்ளி வீசும் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் பெண்களை விழுங்கும் ஆண்களின் கிளுகிளு பார்வை ரகசியத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அதுபற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர் உளவியலாளர்கள். ஆண்களின் பார்வை ரசனையை வைத்தே அவர்களின் பார்வையில் காதல் இருக்கிறதா அல்லது காமம் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து விடலாமாம். பெண்களின் முக வசீகரத்தை ரசிக்கும் ஆண்கள், நீண்டகாலம் காதலோடு வாழ்கிறார்கள், நெளிவுசுளிவான உடலை மட்டும் ரசிக்கும் ஆண்கள் காமத்துடன் கூடிய குறுகிய கால காதலையே விரும்புகிறார்கள் என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவாம்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஜெமைன் கான்பர் உள்பட மனோதத்துவ நிபுணர்கள் ஒன்று சேர்ந்து, 192 ஆண்கள் மற்றும் 183 பெண்களிடம் இந்த கிளுகிளு ஆய்வை நடத்தியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம், தேவதை போன்ற பெண்ணின் படத்தை காட்டி ரசிக்க செய்தனர். பின்னர் அவர்களிடம் கருத்து கேட்டபோது சிலர், ‘இந்தப் பெண்ணுடன் நீண்ட நாள் காதலோடு வாழ விரும்புகிறேன்’ என்றனர். வேறு சிலர் ‘ஒரு நாளாவது இவளோட வாழ்ந்துடணும்’ என்ற ரீதியில் பேசினர். முதலாவது ரக ஆண்கள், பெண்களின் முக வசீகரத்தை மட்டும் ரசித்தவர்கள். இரண்டாவது வகையினர், முகத்தை விட்டு மற்ற பாகங்களை ரசித்தவர்கள்.
இதே நிலைதான் ஆண்களை ரசிக்கும் பெண்களிடமும். பாலின பாகுபாடு இன்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 61 சதவீத ஆண்களும், 69 சதவீத பெண்களும் முக அழகில் மயங்கியுள்ளனர். மற்றவர்கள் உடல் வனப்பில் கவரப்பட்டுள்ளனர்.
பெண்களின் முக அழகை ரசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்பது ஆய்வின் கூடுதல் டிப்ஸ். இதுக்கெல்லாம் ஒரு ஆய்வு தேவையா... இதுதான் உலகத்துக்கே தெரிந்த விஷயமாச்சே என்று நீங்கள் பொருமுவது கேட்கிறது. என்ன செய்வது?

நூறு வயது வாழ டிப்ஸ்

 மசாலா அதிகம் இல்லாத சைவ உணவும், கொஞ்சம் பீரும் போதும். வாழ்வில் செஞ்சுரி அடிக்கலாம் என்கிறார் 120 வயதை கடந்த மூதாட்டி.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகேயுள்ள ராங்மோங்வே கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மூதாட்டி கரங் தெரோன்பி. இவருக்கு 90 வயதில் மகள் உள்ளார். உறவினர்களிடம் விசாரித்ததில் பாட்டிக்கு 120 வயது இருக்கும் என்கின்றனர். உடல் பலவீனமாக இருந்தாலும் பாட்டியின் பார்வை நன்றாக உள்ளது. குரலும் சத்தமாக இருக்கிறது.
‘உங்க ஆயுசு நீடிப்பதன் ரகசியம் என்ன’ என்று பாட்டியிடம் கேட்டால் சிரிக்கிறார். ‘‘இதுல ரகசியம்லாம் ஒண்ணுமில்ல. எல்லாரும்போல தினமும் அரிசி சாதம், வேக வைத்த காய்கறிதான் சாப்பிடுறேன். மசாலா அதிகம் சேர்த்துக்க மாட்டேன். இங்கு கிடைக்கற ‘ஹார்’ என்ற அரிசி பீர் தினமும் குடிப்பேன். காரமில்லாத சைவ டிஷ். அவ்வளவுதான்’’ என்கிறார். கரங் போல் ஒரு டஜன் பாட்டிகள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். எல்லோருமே காரமில்லாத உணவுதான் சாப்பிடுகின்றனர். ஜான் கதர் என்ற முதியவர் கூறுகையில், ‘‘புகையிலை பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதே இல்லை’’ என்கிறார்.

Tuesday, September 7, 2010

பொம்பளப் புள்ள வேணுமா? உப்பை குறைங்க

 ஆசைக்கோ, ஆஸ்திக்கோ.. ஒரு பெண், ஒரு பிள்ளை வேண்டும் என்பது பலருக்கு ஆசை. நினைப்பதெல்லாம் நடக்கிறதா. மாறிப் பிறந்து பல வீடுகளில் சண்டை மண்டை உடைகிறது. இந்த விஷயத்தில் சூப்பர் அட்வைஸ் சொல்லியிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
கர்ப்பிணிகளின் உணவுப் பழக்கத்துக்கும் பிறக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி ஹாலந்தின் மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள், பெண் குழந்தைகளுக்கு விரும்பம் தெரிவித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 23&42 வயதுக்கு உட்பட்ட 172 பெண்களிடம் விஞ்ஞானிகள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பிரட், காய்கறிகள், பழவகைகள், இறைச்சி, அரிசி, பாஸ்தா வகை உணவுகள் என பல்வேறு வகையான உணவுகள் கொடுக்கப்பட்டன.
ஆய்வு முடிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுவதாவது:
தம்பதிகளின் அமைதியான மனநிலை, சரியான நேரத்தில் இணையும் இல்லற உறவு ஆகியவைதான் குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது. அதே நேரம், தாய்க்கு உணவுக் கட்டுப்பாடும் அவசியம். பெண் குழந்தை வேண்டுவோர் முதலில் உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். வாழைப்பழத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கணவன் & மனைவி இருவரும் ஒரே நேரத்தில் டென்ஷன் இல்லாமல் படுக்கைக்கு செல்ல வேண்டியது மிக மிக அவசியம். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். இந்த சோதனைக்கு 80 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.
கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள பால் பொருட்கள், லெஸி, யோகர்ட், பாலாடைக்கட்டி, வஞ்சிர மீன், பசலைக்கீரை, ஓட்ஸ், முட்டைக்கோஸ் வகைகள், முந்திரி, பாதாம், கோதுமை உணவுகள், பூண்டு, பழ வகைகளில் ஆரஞ்சு ஆகியவை அதிகம் சாப்பிடலாம். மாதவிலக்கு நாட்களின் முன்னும் பின்னும் உள்ள ஓரிரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம். இவற்றை கடைபிடித்தால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பெண் குழந்தை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இத்தகைய கட்டுப்பாடுகளை பின்பற்றிய தாய்மார்கள் 21 பேரில் 16 பெண்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மோகம்

 வெளிநாடுகளில் வேலைக்கு போகும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கண்ணில் நீரை வரவழைக்கும். ஏற்கனவே, குடும்பத்தை பிரிந்து நல்லது, கெட்டதுக்குகூட வரமுடியாமல் போன் மூலமே பேசிக்கொள்ளும் சோகம் போதாது என்றால், சொன்னபடி தராமல் குறைந்த சம்பளம் தருவது, சாப்பாடுகூட போடாமல் கொடுமைப்படுத்துவது என பல வேதனைகளை அனுபவிக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். இருவரது சோகமும் ஒரே மாதிரியானது. ஒருவர் திருவாரூரை சேர்ந்த பெண். வீட்டு வேலை செய்வதற்கு கோலாலம்பூருக்கு சென்றிருக்கிறார். குறைந்த சம்பளம். 18 மணி நேரம் வேலை. வேளாவேளைக்கு உணவு தராமல் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். வேலை பார்த்தது போதும்.. விட்டா ஊருக்கு போய்விடலாம் என்ற முடிவில் பாஸ்போர்ட்டை கேட்டிருக்கிறார். ஆனால் வேலை பார்த்த இடத்தில் இரண்டு வருடம் கழித்துதான் தருவோம் என்று கூறியிருக்கிறார்கள். அங்குள்ள ஏஜென்ட்களை அணுகி போலி பாஸ்போர்ட்டில் தாயகம் திரும்பியிருக்கிறார்.
இன்னொருவர், நாகப்பட்டினத்தை சேர்ந்த காஜாமொய்தீன். மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றிருக்கிறார். வேலை பிடிக்கவில்லை. இவருக்கும் வேலை பார்த்த இடத்தில் பாஸ்போர்ட் தரவில்லை. போலி பாஸ்போர்ட்டில் திரும்பியவர் சிக்கிவிட்டார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். வீட்டு வேலை, கட்டிட வேலை, டிரைவர் வேலை என குறைந்த சம்பளத்தில் இருக்கிறார்கள். பாஸ்போர்ட்டை வேலை பார்க்கும் இடத்தில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாமல் ஊர் திரும்பக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. பல நேரங்களில் டிரைவர் வேலைக்கு போனவர்கள் 55 டிகிரி பாலைவன வெயிலில் ஒட்டகம் மேய்ப்பதை பார்க்கலாம்.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பிரச்னையை அங்குள்ள அந்தந்த நாட்டு தூதரகங்கள்தான் தீர்த்துவைப்பது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய தூதரகம் ரொம்ப மோசம். போதுமான ஊழியர்கள் இல்லை என காரணம் கூறி பிரச்னைகளை தீர்க்க எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. உதவியும் செய்வதில்லை. அதனால்தான் எப்படியாவது இந்த நரகத்தில் இருந்து தப்பித்தால்போதும் என போலி பாஸ்போர்ட்டில் இந்தியா திரும்புகின்றனர்.
உலகம் முழுவதுமே ஒரு அமெரிக்கனுக்கோ இங்கிலாந்துக்காரனுக்கோ பிரச்னை என்றால் அது அந்த ஊரில் அமளிதுமளியாகும். சம்பந்தப்பட்ட நாட்டை வறுத்தெடுத்து விடுவார்கள். அதுதான் அந்த நாடுகளின் பலம். இந்தியாவுக்கு அந்த பலம் எப்போது வருமோ தெரியவில்லை.

Friday, September 3, 2010

சீனாவின் அத்துமீறல்

 ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சீன அரசு மறுத்திருக்கிறது.
பாதகமான செய்தி வரும்போது மறுப்பறிக்கை தருவதற்காக எல்லா அரசாங்கத்திலும் அதிகாரிகள் இருக்கிறார்கள். மறுப்புகள் ஒரே மாதிரி இருப்பதை தீவிர வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். செய்தி ஆதாரமற்றது; உள்நோக்கம் கொண்டது என பொதுவான வாசகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். சீன மறுப்பு சற்று மாறுதல்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் நெடுஞ்சாலையும் தண்டவாளமும் அமைக்கும் பணியில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஏற்கனவே அதில் ஒரு பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் தானமாக கொடுத்திருக்கிறது. அதில் கரகோரம் நெடுஞ்சாலையை சீனா அமைத்துள்ளது. அதை நீட்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் எல்லை வரையிலும் போட்டால், வளைகுடா நாடுகளுடன் சீனாவுக்கு ஷார்ட் கட் கிடைத்துவிடும். ஆப்கானிஸ்தானையும் தொடமுடியும்.
வரைபடத்தை பார்த்தால் இது நமக்கு எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது புரியும். நேபாளத்தில் மாவோயிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி தன்வசப்படுத்தும் திட்டத்தில் சீனா முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், காஷ்மீரிலும் அதன் தடம் பதியுமானால் இந்தியாவை நிலரீதியாக சுற்றி வளைத்ததாகி விடும். இன்றைய தேதியில் 11 ஆயிரம் சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரகசியமாக இயங்கி வருவதாகவும், யாரும் அங்கு செல்ல அனுமதியில்லை என்பதால் வெளியுலகத்துக்கு தெரியவில்லை என்றும் உளவு தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிகை எழுதியிருக்கிறது. ‘அந்த பகுதியில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, மருந்துகளை வேறுவழியாக கொண்டு செல்ல முடியாது. எனவே, அருகில் இருக்கும் நாங்கள் உதவ பாகிஸ்தான் கேட்டது. அதற்கு ஆட்களை அனுப்பினோம்’ என்று சீனா கூறியிருக்கிறது. பாகிஸ்தான் அறிக்கை அதை ஆமோதிக்கிறது.
இந்தியாவுடன் நல்லுறவை கெடுக்க யாரோ செய்யும் சதி என்றும் அமெரிக்க செய்தியை சீனா வர்ணித்திருப்பது எதிர்பாராத விமர்சனம். இருந்தாலும், சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பதை சீனாவுக்கு யார் சொல்வது?

கிரிக்கெட் சூதாட்டத்தை அங்கீகரித்து விடலாம் அரசுக்கு கோர்ட் யோசனை

 கிரிக்கெட் உள்பட எல்லா விளையாட்டுகளிலும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கலாம் என்று டெல்லி நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் கடந்த 2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதின. அப்போது, இந்தப் போட்டியின் முடிவு தொடர்பாக சூதாட்டம் நடத்தியதாக பிரஷாந்த் குமார் மாலிக், விக்கி குரோவர் ஆகியோரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், டெல்லி போலீசின் சூதாட்ட தடுப்பு சட்டப்படி இரண்டு பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
இதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருவரும் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி தர்மேஷ் சர்மா கூறியதாவது:
கிரிக்கெட் மட்டுமின்றி பல விளையாட்டுகளிலும் சட்ட விரோதமாக சூதாட்டங்கள், உலகம் முழுவதும் நடக்கிறது. இதில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இந்தப் பணம், தீவிரவாதிகள் மற்றும் போதை மருந்து கடத்தல் பேர்வழிகளிடம் சிக்கி, நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு விளையாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக அங்கீகாரம் செய்து விடலாம்.
அப்படி செய்வதால், பணம் பரிமாற்றம் பற்றி அரசு எளிதாக கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் நிதியை மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். அதனால், ஆன்லைன் அல்லது வேறு எந்த வழியிலும் விளையாட்டில் சூதாட்டம் நடப்பதை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது 25 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மட்டும் 3 ஆயிரம் சூதாட்டம் புரோக்கர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் எந்த இடத்தில் பரப்பரப்பான விளையாட்டு போட்டி நடந்தாலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போலீசுக்கு தெரியாமல் இது நடக்க முடியாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதால்தான் சூதாட்டம் தொடர்ந்து நடக்கிறது. அதனால், சூதாட்டத்துக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்குவதுதான் ஒரே வழி.
Related Posts with Thumbnails
 

Blogger